உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி நிவாரணம் கிடைக்கவில்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமாக வீ.இராதாகிருஷ்ணன் (V. Radhakrishnan) தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக எல்லாவற்றுக்கும் மக்கள் வரிசையில் காத்திக்க வேண்டிய பேரவலமும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நோர்ட்டன் – பிரிட்ஜ் பகுதியில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
2021 ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது. அதிகளவு துன்பங்களை வழங்கிய ஆண்டாக அது அமைந்துவிட்டது. கொரோனா ஆக்கிரமிப்பால் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
எல்லாவற்றுக்கும் மக்கள் வரிசையில் காத்திக்க வேண்டிய பேரவலமும் ஏற்பட்டது. எனவே, மலர்ந்துள்ள புத்தாண்டாவது சுபீட்சமாக அமையவேண்டுமென பிரார்த்திப்போம்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமானது இந்த நாட்டையே உலுக்கியது. அத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உறவுகளை இழந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.
சூத்திரதாரி யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்ல. அதற்கான விசாரணைகளை துரிதப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இது விடயத்தில் பக்கச்சார்பற்ற விசாரணையை எதிர்ப்பார்க்கின்றோம்.
யுகதனவி விவகாரத்தில் இந்த அரசு முறையற்ற விதத்திலும், வெளிப்படைதன்மை இன்றியுமே செயற்படுகின்றது. உரிய முகாமைத்துவம் இல்லை. அதனால்தான் பணவீக்கம் கூட அதிகரித்து வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








































