இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள மின்சார கட்டணத்தை எதிர்வரும் 6 மாத காலத்திற்கு திருத்தம் செய்யாமல் அமுல்படுத்த வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைத்துள்ளது.
மின்சார கட்டண திருத்தம் குறித்து பரிந்துரைகளை முன்வைத்து இலங்கை மின்சார சபை இந்த பரிந்துரையை ஆணைக்குழுவிடம் முன்வைத்துள்ளது.
பொதுமக்களின் அபிப்ராயங்களை கோரியதன் பின்னர் இந்த பரிந்துரை குறித்து உறுதியான தீர்மானத்தை அறிவிப்பதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க மின்சார கட்டணத்தின் அடிப்படையில் வருடத்தில் இரண்டு தடவைகள் மின்கட்டணத்தை திருத்தம் செய்வதாக கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
எனினும், 2023 ஆம் ஆண்டு எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகிய மூலப்பொருட்களின் விலையேற்றத்தை கருத்திற்கொண்டு ஆண்டிற்கு 4 தடவைகள் மின்சார கட்டணத்தை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
2024 ஆம் ஆண்டு மார்ச் 04 மற்றும் ஜுலை 15 ஆகிய திகதிகளில் மின்சார கட்டணத்தை திருத்தம் செய்ய இலங்கை மின்சார சபை ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
2024 ஆம் ஆண்டு முன்னெடுக்க வேண்டிய 3 வது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை கடந்த ஆகஸ்ட் மாதம் நடுப்பகுதியில் பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்தது.
மூன்றாவது மின்சார கட்டண திருத்த பரிந்துரையில் மின்கட்டணத்தை நூற்றுக்கு 6 சதவீதத்தால் குறைக்க மின்சாரசபை உத்தேசித்திருந்தது.
எனினும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த யோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை.
பரிந்துரைகளின் தரவுகளில் குளறுபடிகள் காணப்படுவதால் அவற்றை திருத்தி சரியான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியது.
இதற்கமைய மின்சார சபை நேற்று முன்தினம் (06-12-2024) திருத்தப்பட்ட மின்சார கட்ட திருத்த யோசனையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது.
புதிய திருத்தத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் முன்வைக்கப்பட்ட 6 சதவீத மின்கட்டண குறைப்பு இரத்து செய்யப்பட்டு, எதிர்வரும் 6 மாத காலத்துக்கு மின்சார கட்டணத்தை திருத்தம் செய்யாமல் தற்போதைய கட்டண திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று இலங்கை மின்சார சபை பரிந்துரைத்துள்ளது.