யாழில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எனக்குத் தரலாம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டி அல்லது சொத்துக்களை இழக்கச் செய்தவர்களும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
விசாரணைகள்
யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.
சட்டவிரோதச் செயற்பாடு
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளின் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெறப்படும் பணம், சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மீட்டர் வட்டி வணிகம், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, குழுச் சண்டைகள் போன்ற குற்றச் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.








































