வடக்கின் கல்விச் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீடுகளை அனுமதிக்க முடியாதென வட மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்திலோ கல்விச் செயற்பாடுகளிலோ தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் சர்வவேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கின் கல்வியில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களின் நிர்வாக அலுவலகக் குறைகளை களைந்து கல்வியின் வினைத்திறனை மேம்படுத்தும் நோக்கில் மாபெரும் நடமாடும் சேவை நேற்று வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் வடமாகண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரனின் நேரடி நெறிப்படுத்தலில் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், இராணுவத்தின் தலையீடுகள் கல்வியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என எச்சரித்தார்.