தமிழரசுக்கட்சியுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாக முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம், சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவிற்கு அறிவித்துள்ளார். நேற்று காலை இந்த மின்னஞ்சலை அனுப்பியுள்ளார்.
முன்னாள் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று (24) நல்லூரில் தனிக்கட்சி அறிவித்தல் விடுத்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பில்- தமிழரசுககட்சியின் சார்பில்- தேர்தலில் களமிறங்கிய க.வி.விக்னேஸ்வரனிற்கும், தமிழரசுக்கட்சி தலைவர்கள் சிலருக்குமிடையில் சிறிது காலத்திலேயே உரசல் ஏற்பட்டது.
இது பின்னர் வடக்கு மாகாணசபைக்குள் அணிகளாக உருவாகி, அமைச்சரவை சர்ச்சை வரை சென்றது. வடமாகாணசபை பல்வேறு இழுபறிகளுடன், உள்ளக சிக்கலுடன் திக்குமுக்காடியதற்கு இந்த மோதலே முதன்மை காரணமாக இருந்தது.
இந்த மோதல்கள் வலுத்த நிலையில், விக்னேஸ்வரன் தனி வழி செல்வாரா அல்லது மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் தொடர்வாரா என்ற கேள்விகள் இருந்தன. இந்த நிலைமையில், நேற்று தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கூட்டணிக்கான அறிவித்தலை விக்னேஸ்வரன் விடுத்தார்.
காலை 9.30 மணிக்கு இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு மின்னஞ்சலொன்றை க.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ளார். அதன் பிரதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில், “கடந்த மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் என்னை வேட்பாளராக தெரிவு செய்ததற்கும், கடந்த மாகாணசபை பதவிக்காலத்தில் நான் எனது பணிகளை செய்த ஒத்துழைத்ததற்கும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அரசியல் பயணம் செய்வதில்லை, தனி வழியில் செல்வதென் முடிவெடுத்துள்ளேன். இந்த அரசியல் பயணத்திற்காக, தமிழரசுக்கட்சியுடனும், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இதுவரை இருந்த வந்த சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொள்கிறேன்“ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், மாகாணசபையின் பதவிக்காலத்தில் கூட்டமைப்பிற்குள் உடைவை ஏற்படுத்திய பழிச்சொல்லை தவிர்க்க விக்னேஸ்வரன் தரப்பு முயன்றுள்ளதாக தெரிகிறது.