பிரிட்டனின் திரைப்படச் சான்றிதழ் வாரியம், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை வழங்கியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மூன்றாவது படம் ‘சர்கார்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு வருகிற 6-ம் திகதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி, தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. அதேநேரத்தில், இந்தியா தவிர்த்த மற்ற நாடுகளிலும் படம் வெளியாகிறது. இதில், பிரிட்டிஷ் தணிக்கை வாரியம் ‘சர்கார்’ படத்தைப் பார்த்து, அதுகுறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
12 வயதுக்கு குறைவானவர்கள், தனியாகப் படத்தைப் பார்க்க அனுமதியில்லை என்று தணிக்கை தரப்பட்டுள்ளது. அப்படிப் பார்க்க வேண்டுமென்றால், பெரியவர்கள் துணையுடன் பார்க்கலாம். படத்தில் மிதமான வன்முறை, அச்சுறுத்தல், காயங்கள், வலுவான மொழி இருப்பதாகவும் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் நீளம் 163 நிமிடங்கள் (இரண்டே முக்கால் மணி நேரம்).
‘சர்கார்’, தமிழ் மொழி ஆக்ஷன் ட்ராமா திரைப்படம். வெற்றிகரமான ஒரு தொழிலதிபர், தனது நகரத்தில் அரசியலில் நடக்கும் ஊழலை எதிர்க்கிறார்’ எனப் படத்தின் சாரம்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்பட மொத்தம் 80 நாடுகளில் ‘சர்கார்’ வெளியாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.