பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து ஏமாற்றியதால் விரக்தியடைந்த யுவதியொருவர் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தனக்கு தானே தீமூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
ஒருவழியாக தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்திய பொலிசார், யுவதியை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் வவுனியாவைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், 20 வயதுடைய யுவதியை காதலித்து வந்தார்.
அண்மையில், அந்த யுவதியை அழைத்து சென்று தனிக்குடித்தனமும் நடத்தியிருக்கிறார். எனினும் அண்மைய நாள்களில் அந்தப் பெண்ணுடனான தொடர்பை பொலிஸ் உத்தியோகத்தர் துண்டித்தார்.
அதனால் விரக்தியடைந்த அந்தப் பெண் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வந்து தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றார் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணைக் கைது செய்த காங்கேசன்துறைப் பொலிஸார், ஏ அறிக்கையை மல்லாகம் நீதிமன்றில் முன்வைத்து மன்றில் முற்படுத்தினர்.
இளம் பெண்ணை விசாரணை செய்த மன்று, அவரை பெண்கள் பராமரிப்பு நிலையத்தில் அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.