இந்தியாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான மறைந்த ஸ்ரீதேவியின் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக அவரது கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி பாலிவுட் வரை சென்று முன்னணி நடிகையானவர் ஸ்ரீதேவி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக விளங்கிய அவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.
அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி அங்கு தங்கி இருந்த ஓட்டல் குளியலறை தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்தார். தற்போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் இந்தி மற்றும் தெலுங்கில் நடித்து வருகிறார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், தமிழில் அஜித் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் அவர், தன் மனைவி ஸ்ரீதேவியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் படம் உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஸ்ரீதேவி வேடத்தில் நடிக்கும் நடிகைக்கான தேர்வு நடந்து வருகிறது.