‘தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் திட்டத்தை 1994ம் ஆண்டிலேயே சர்வதேசம் வகுத்திருந்ததாகவும், ஆனால் அந்த திட்டத்தில் விடுதலைப் புலிகள் வெற்றிபெற்று விட்டதாகவும்’ தெரிவித்திருக்கின்றார் பிரபல ஈழத்து எழுத்தாளரும், முன்னாள் போராளியுமான குணா கவியழகன்.
‘சமாதான ஒப்பந்தம் கூட இன்னொரு யுத்தத்திற்கான ஒரு முன்னோடித் திட்டமே’ என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடப்பட இருக்கின்ற குணா கவியழகனின் படைப்புக்கள் தொடர்பாக IBC- தமிழ் தொலைக்காட்சிக்கு குணா கவியழகன் வழங்கிய சிறப்பு நேர்காணலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தமிழீழ விடுதலை போரில் மட்டுமல்லாமல் தமிழீழ கலைத்துறையிலும் காத்திரமான பங்காற்றியிருந்த குணா கவியழகன் தற்போது இலக்கியத்தில் தனது அனுபவத்தின் மூலமும் எழுத்தற்றால் மூலமும் ஈழ மண்ணின் வாசனையையும் போராட்டத்தின் வடுக்களையும் இலகு மொழியில் கதைகளாக்கி வரலாற்றினை பதியவைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.
அண்மையில் வெளிவந்த அவருடைய நூல்களான ‘கர்ப்ப நிலம்’, ‘போருழல் காதை’ ஆகிய இரு நூல்களின் வெளியிட்டு விழா 27.07.2019 சனிக்கிழமை மாலை 4.05 தொடக்கம் 7மணி வரை லண்டன் ஹரோவ் சிவிக் சென்டர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
எழுத்தாளர் குணகவியழகன் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் விமர்சகர், எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர் வாசுதேவன்,விமர்சகர் கெளரி பரா, இலக்கிய விமர்சாகர் மாதவி சிவலீலன் ஆகியோர் மதிப்புரை வழங்க, ஊடகர் இளையதம்பி தயானந்தா தலைமையேற்று நிகழ்வை நடத்தவிருக்கிறார்.
நிகழ்வின்போது நியூசிலாந்தில் உருவான கவனி குறும்படம் சிறப்பு காட்சியாக காண்பிக்கப்படவுள்ளது. அத்துடன் எழுத்தாளரின் இந்த இரு நூல்களையும் அரங்கில் பெற்றுக்கொள்ள முடியும்.
-IBC TAMIL