முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களுடைய 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றம் இன்று (02) திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை பத்து முப்பது மணியளவில் பாடசாலையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் பாண்ட் வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டு அதனைத் தொடர்ந்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களின் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட விளையாட்டு முற்றத்திற்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து விளையாட்டு மைதான திறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மூன்று மாணவர்களுடைய கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
மிகவும் பின்தங்கிய இடமாகக் காணப்படுகின்ற இந்த பாடசாலையின் வளங்கள் பற்றாக்குறைகள் இருக்கின்ற போதும் இந்த பாடசாலையில் சிறந்த முறையில் கல்வி கற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மூன்று மாணவிகளை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் விருந்தினர்களால் நினைவு கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
பாடசாலை முதல்வர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆண்டிஜயா புவனேஸ்வரன் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முப்புர வட்டார உறுப்பினர் குகனேசன் சுதந்திரபுரம் கிராம அலுவலர் மு .வருண்ஜீவ் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.