சந்தையில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் சமையல் எரிவாயுவின் பற்றாக்குறை எதிர்வரும் சில தினங்களில் நிவர்த்தி செய்யப்படுமென எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு பற்றாக்குறை தொடர்பில் எரிவாயு நிறுவனங்கள், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சவுதி அரேபியாவின் அப்கைக் மற்றும் குராய்ஸில் உள்ள சவுதி அரம்கோ எண்ணெய் பதப்படுத்தும் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து உலகளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது.குறித்த தாக்குதல் கச்சா எண்ணெய் உற்பத்தியையும், கச்சா எண்ணெய் உற்பத்தியின் துணை தயாரிப்பான சமையல் எரிவாயு உற்பத்தியையும்வெகுவாக பாதித்தது. இதன்காரணமாக தெற்காசியாவிற்கான எரிவாயு விநியோகத்தில் மந்த நிலை ஏற்பட்டது.
தற்போதைய நிலையில், குறித்த எரிவாயு நிறுவனங்களுக்கு, சமையல் எரிவாயு கிடைத்த வண்ணம் உள்ள நிலையில், எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு அவற்றை பராமரிக்க முடியும் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.எரிவாயு பற்றாக்குறை தற்காலிகமாக இடம்பெற்றதொன்று என குறிப்பிட்ட அவர்கள், சர்வதேச ரீதியில் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.