நாட்டில் விஸ்பரூபம் எடுத்துள்ள எரிவாயு தட்டுப்பாடு இன்னும் இரண்டு நாட்களிற்குள் தீர்ந்து விடும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று காலையில் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றியபடி, மும்பையிலிருந்து சரக்குக்கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று அதிகாலை கொழுமபு துறைமுகத்தை கப்பல் வந்தடைந்ததும், நாள் முழுவதும் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் பணிகள் நடக்கும். துறைமுகத்திலிருந்தே நாடு முழுவதுமுள்ள முகவர்களிற்கு விநியோகம் நடைபெறும் என தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
கடந்த மாத தொடக்கத்தில் சவுதி அரேபியாவிற்கு அண்மையில் செங்கடலில் ஈரானிய எண்ணெய் ராங்கர் ஒன்று தாக்குதலுக்கு உள்ளான பின்னர் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டதாக அவர் கூறினார். “அந்த சம்பவத்தின் பின்னர், அதிகமான தாக்குதல்களுக்கு பயந்து எரிவாயு ராங்கர்கள் இப்பகுதியைத் தவிர்த்தன. இதனால் கொழும்பை அடைவதில் தாமதம் ஏற்பட்டது. கொழும்பு நோக்கி பயணித்த பல எரிவாயு ராங்கர்கள் மும்பைக்கு திருப்பி விடப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக, இந்திய கடற்கரையிலிருந்து அண்மையில் ஏற்பட்ட சூறாவளி நிலைமை காரணமாக அவர்களால் கொழும்புக்கு செல்ல முடியவில்லை” என்று அவர் கூறினார்.
இதேவேளை, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை அதிக விலையில் விற்பனை செய்த 37 முகவர்கள் மீது நுகர்வோர் விவகார ஆணையம் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். சில முகவர்கள் நுகர்வோருக்கு நிபந்தனைகளை விதித்திருந்தனர், அவர்களிடமிருந்து ஒரு எரிவாயு குக்கரை வாங்கும்படி கட்டாயப்படுத்தினர். சில முகவர்கள் தங்கள் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்களை மட்டுமே வழங்கியிருந்தனர் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு விற்க மறுத்துவிட்டனர்.
மேலும் இரண்டு எரிவாயு ராங்கர்கள் அடுத்த வாரம் கொழும்பு துறைமுகத்திற்கு வர உள்ளது. அதன்பிறகு, முழு எரிவாயு விநியோகமும் இயல்பாக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.