யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான நபர் ஒருவர் தெல்லிப்பளை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்தநபர் கடந்தவாரம் கட்டார் நாட்டிலிருந்த சொந்த இடத்துக்கு திரும்பியுள்ளார்.அவர் சீன பிரஜை ஒருவருடன் அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.
இந்தநிலையில் இருமல், சுவாசப்பிரச்சினை, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டநிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை மேலதிக பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுப்புவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் அவர் தப்பிச் சென்றுள்ளதாக தெல்லிப்பளை வைத்தியசாலை நிர்வாகத்தினரால் பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக எமது வைத்தியசாலையில் வசதிகள் உள்ளன. எனக்கு குறித்த நோயாளி தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் எமது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
தப்பிச்சென்ற நோயாளியின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அவர் அங்கு இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.இது தொடர்பில் அவரின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.அச்சத்தின் காரணமாக அவர் மறைந்திருக்கலாம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.