மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறித்து கொழும்பில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று புகழாரம் சூட்டியிருக்கிறது.
நேற்று முந்தினம் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாது என தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
தமிழகமே கண்ணீர் கடலில் மிதந்தது. பல்வேறு நாட்டுத் தலைவர்களும் ஜெயலலிதாவின் இறப்பிற்கு தமது வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறினே, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, வடமாகாண சபை முதலமைச்சர், சம்பந்தன் என அனைவரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
எனினும், முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த காலத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த வேளை தென்னிலங்கை ஊடகங்கள் அவரை பலவாறாக தூற்றியிருந்தன.
கேலிச்சித்திரங்களைக் கொண்டு அசிங்கப்படுத்தும் செயற்பாடுகளிலும் சில ஊடகங்கள் செயற்பட்டன.
இந்நிலையில் ஜெயலலிதாவின் இறப்புக் குறித்து கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கத்தில்,
தமிழகத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை எடுத்துச் செல்ல வேண்டிய கடினமான பணி காத்திருக்கிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் 2009இல் முடிந்த பிறகே தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினை தேர்தல் விவகாரமாக பெரிய அளவில் உருவெடுக்காத நிலையில் ஜெயலலிதா தனது முந்தைய தனி ஈழத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றி கொண்டு தனி ஈழத்திற்காக தீர்மானம் நிறைவேற்றினார் என்பதையும் அந்த ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களான அம்மா உணவகம், பள்ளி மாணவர்களுக்கு இலவச லப்டாப் மற்றும் பிற இலவசங்களின் அறிவிப்பையும் புகழ்ந்து சித்தரித்துள்ளது இந்தத் தலையங்கம்.
மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்த ஜெயலலிதாவை பலரும் தனிமனித வழிபாட்டை பெருக்கியவர் என்று விமர்சனம் செய்தனர்.
ஆனாலும் கட்சி வேறுபாடின்றி, சாதி மத பேதமின்றி பலரும் ஜெயலலிதாவை நேசித்துள்ளனர். இது அப்போலோ மருத்துவமனைக்கு வெளியே நின்றிருந்த தொண்டர்கள் கூட்டத்தைக் கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது என்று வியந்து பேசியுள்ளது.
இதேவேளை செவ்வாய்க்கிழமை இலங்கையில் இருந்து வெளிவந்த தமிழ், ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் தமது முதல் பக்கத்தில் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இறப்புச் செய்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.