யாழ்ப்பாணத்தில் தென்னை மர வட்டு மிதிப்பதாக குறைந்த கூலி பேசி வேலையை தொடங்கும் நபர்கள் வேலை முடிந்தவுடன் அதிக பணம் கேட்டு மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி தபால் பெட்டி சந்திக்கு அருகில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் சென்ற இருவர் உங்கள் வீட்டு தென்னை மரத்தில் ஏறி வட்டினை மிதிச்சு தருகின்றோம் 300 ரூபாய் கூலி தாருங்கள் என கோரியபோது வீட்டின் உரிமையாளர்கள் வேண்டாம் எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த வீட்டுக்கு மீளவும் சென்ற இருவர் தென்னையில் ஏறி வட்டு மிதிச்சு தாறம் 300 ரூபாய் தாருங்கள் என பேரம் பேசியபோது வீட்டு உரிமையாளரும் அதற்கு சம்மதித்துள்ளார்.
அதனை பின்னர் தென்னையில் ஏறி வட்டை மிதித்தவர்கள் 15 நிமிடத்திற்குள் இறங்கி 2 ஆயிரத்து 300 ரூபாய் கூலி கேட்டுள்ளார்கள்.
அவர்களின் கூலியை கேட்ட அதிர்ச்சி அடைந்த வீட்டு உரிமையாளர் 300 ரூபாய் தானே முதலில் என கூறி 300 ரூபாயை கொடுத்துள்ளார்.
அதனைவாங்காத கூலிக்கு வந்த இருவரும் தாம் 2 ஆயிரத்து 300 தான் கேட்டோம். அதற்கு நீங்கள் சம்மதித்ததால் தான் தென்னையில் ஏறினோம் என கூறி தமக்கு 2 ஆயிரத்து 300 ரூபாய் தந்தால்தான் வீட்டை விட்டு போவோம் என கூறி வீட்டு வளவுக்குள் இருந்துள்ளார்கள்.
சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் இருவரும் வீட்டு வளவை விட்டு வெளியேறாமல் இருந்ததால் வேறு வழியின்றி வீட்டின் உரிமையாளர் அவர்கள் கேட்ட 2 ஆயி்த்து 300 ரூபாய் பணத்தினை கொடுத்து அனுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை பகல் வேளைகளில் , வீடுகளுக்கு பழைய பொருள்கள் வாங்க , விற்க எனவும் , கூலி வேலைகள் செய்து தருவதாக கூறியும் ஜோதிடம் , மற்றும் ஆலயத்திற்கு பணம் சேகரிக்க எனவும் வரும் ஏமாற்று பேர்வழிகள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன் , தெரியாத நபர்களை வீட்டு வளவினுள் அனுமதிப்பதை இயன்ற அளவிற்கு தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு வரும் சந்தேக நபர்கள் வீடுகளை கண்காணித்து களவு மற்றும் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனவும் பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.