வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில், வாகன சாரதி உட்பட ஐவர் பலியாகியதுடன் 25 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும், யாழ்ப்பாணம் திருநெல்வேலியிருந்து கொழும்பு நோக்கி சென்ற வானும் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட நிலையில் விபத்துக்குள்ளாகிய வானும் அத்தீயில் எரிந்துள்ளது. இதன்போது வானுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிந்தமை குறிப்பிடத்தக்கது.
தீப்பற்றிய வாகனங்களை தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு தீயினுள் எரிந்த நிலையில் வாகன சாரதியின் சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஆறுமுகம் தேவராஜா (62), தேவராஜா சுகந்தினி (51), தேவராஜா சுதர்சன் (30), இராமலிங்கம் சோமசுந்தரம் (83) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியாகினர்.
வாகன சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (24) என்ற இளைஞனும் பலியாகியுள்ளார்.
இதேவேளை வானில் பயணித்த சோமசுந்தரம் லக்சனா (29) என்பவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை ஒமந்தை பொலிஸார் மற்றும் புளியங்குளம் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு மேலதிக அசம்பாவிதங்களை நடைபெறாதவாறு தவிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆறு என முன்னர் குறிப்பிட்டிருந்தபோதும், தற்போது ஐவரே உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.