திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று கார்த்திகை தீப உற்சவம் நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு 1,008 மண் விளக்குகள் ஏற்றப்பட்டன. மண் பானையை இரண்டாக உடைத்து மேல் பாகத்தை அடியில் மனையாக வைத்து அடி பாகத்தில் பசு நெய்யை நிரப்பினர்.
பிறகு ஏழுமலையான் கோவில், யோக நரசிம்மர் சன்னதி, பாஷ்யக்காரர் சன்னதி, பேடி ஆஞ்சநேயர் கோவில், வராக சாமி கோவில் உள்ளிட்ட இடங்களில் திருமலை ஜீயர்கள், அர்ச்சகர்கள் தீபம் ஏற்றினர்.
மேலும் கோவில் பிரகாரங்களில் மண்ணால் ஆன அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபட்டனர். பின்னர் ஏழுமலையான் கோவில் எதிரில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.
இதற்காக பவுர்ணமி தோறும் மாலையில் நடைபெறும் கருட சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் வசந்தோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
தீப உற்சவ விழாவில் தேவஸ்தான அதிகாரிகள் சதலவாட கிருஷ்ணமூர்த்தி, சாம்பசிவராவ், சீனிவாச ராஜூ, ராமாராவ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.