தேவனுடைய அளவற்ற கிருபையினால் இந்த நாளைக் காணச்செய்தது தேவனுடைய அளவற்ற கிருபையே. ஒவ்வொரு நாளையும் நாம் தொடங்கும்போது அந்த நாளுக்குரிய ஆசீர்வாதத்தை, ஆண்ட வரிடத்தில் பெற்றுக்கொள்வது மிக முக்கியம். இந்நாளில் நம் கர்த்தர் உங்களோடிருந்து உங்களுடைய மனவிருப்பத்தை எல்லாம் நிறைவேற்றி உங்களை சந்தோஷப்படுத்துவார்.
‘உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவேன்’ (ஆதி-17:2).
மேற்கண்ட வாக்குத்தத்தத்தின்படி கர்த்தர் நிச்சயம் உங்களை பெருகப்பண்ணி தம்முடைய பரிசுத்தமுள்ள நாமத்தை உங்கள் மூலமாய் மகிமைப்படுத்துவார்.
தேவ சித்தம்
‘நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடுஅதிலேபெருகுவீர் களாக’ (கொலோ-2:7)
ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தின்படி நீங்கள் சகலவற்றிலும் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் பெருகுவதுதான் தேவனுடைய பரிபூரண சித்தமாயிருக்கிறது. உங்கள் ஆவிக்குரிய வாழ்வில், சரீர ஆரோக்கியத்தில் மற்றும் பொருளாதாரத்தில் சம்பூரணமடைந்து சகலவற்றிலும் ஆண்டவர் உங்களை பெருகச் செய்வார் என்பதை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள்.
கர்த்தரை ஆராதியுங்கள்
‘அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகன பலிகளாகப் பலியிட்டான்’ (ஆதி 8:20)
‘பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்புங்கள்’ (ஆதி 9:1) என்றார். இதன்படி அவர்கள் சந்ததியை தேவன் பெருகச் செய்தார்.
‘நம்முடைய ஆண்டவர் ஆராதனைக்குரியவர். ஆண்டவரை தொழுதுகொள்ளும்போது ஆவியோடும், உண்மையோடும் தொழுதுகொள்ள வேண்டும்’ என்று யோவான் 4-ம் அதிகாரம் 24-ம் வசனம் கூறுகிறது.
இப்புதிய நாளில் உங்கள் நேரத்தை கர்த்தருக்குக் கொடுத்து கர்த்தரோடு செலவிடுங்கள். ‘என் நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பேன்’ என்று வாக்குப்பண்ணினவர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்துப் பெருகச் செய்வார்.
கர்த்தருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள்
‘அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்து கொண்டு, கிழக்கே பிராயணப்பட்டுப் போனான்்: இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்’ (ஆதி 13:11).
கர்த்தருடைய வாக்கை தம் வாழ்வில் சொந்தமாக்கிக் கொள்ள, தேவ வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தன்னுடைய தேசம், இனம், தகப்பன் வீடு எல்லாவற்றையும் விட்டுவிட்டு புறப்பட்டுப்போனார் என ஆபிரகாம் குறித்து ஆதி-12:4 கூறுகிறது.
போகும் பாதையில் லோத்தின் மந்தை மேய்ப்பருக்கும், ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. தன்னோடு லோத்தைக் கூட்டிக் கொண்டு வந்தது தவறான முடிவு என்பதை உணர்ந்து மிகவும் தைரியமாய் சரியான தீர்மானம் எடுத்து லோத்தை விட்டு ஆபிரகாம் பிரிந்தான்.
இவ்வாறு ஆபிரகாம் தேவனுடைய சித்தத்திற்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்தபடியினால் ‘உன் சந்ததியைப் பூமியின் தூளைப் போலப் பெருகப்பண்ணுவேன்’ (ஆதி 13:16) என்றார்.
இந்த நாளின் ஆசீர்வாதங்களுக்கு இடையூறு உண்டாக்குகிற எல்லாவற்றையும் முற்றிலும் அர்ப்பணியுங்கள்.
மகிழ்ச்சி பெருகும்
‘அந்த ஜாதியைத் திரளாக்கி அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்: அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களி கூருகிறது போலவும் உமக்கு முன்பாக மகிழுகிறார் கள்’. (ஏசா 9:3)
கர்த்தர், நீங்கள் இழந்த மகிழ்ச்சியைத் திரும்ப உங்களுக்குத் தந்து மகிழ்ச்சியினால் பெருகப்பண்ணுவார். ஏனெனில் இருளில் இருக்கும் ஜனங்கள் வெளிச்சமாகிய கிறிஸ்துவிடம் வந்ததுபோல, நீங்களும் கிறிஸ்துவின் ரட்சிப்பின் சந்தோஷத்தால் நிரப்பப்படுவீர்கள்.
‘சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்கு சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்’ (ஏசா 40:29)
இந்நாளில் ஆண்டவரை முற்றிலுமாய் சார்ந்து கொள்ளுங்கள். உங்கள் சுய ஞானம், பலத்தை முற்றிலும் நம்பாதிருங்கள். அவ்வாறு நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ளும்போது, உங்களுடைய ஆத்மாவை மாத்திரமல்ல உங்கள் சரீரத்திலே ஒவ்வொரு நாளுக்குரிய புது பலனை அவர் கொடுத்து எல்லாக் களைப்பையும் சோர்வையும் அகற்றிப்போடுவார். எனவே, கர்த்தர் சமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கவும், வேதத்தை வாசிக்கவும் மறந்து போகாதீர்கள்.
பொருளாதாரத்தை பெருகப்பண்ணுவார்
‘விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதை பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்’ (கொரி 9:10)
நீங்கள் தரித்திரத்தில், கடன் பாரத்தில் கட்டப்படுவது தேவ சித்தமே இல்லை. ஏனெனில் நம்முடைய தரித்திரங்களையும், வறுமைகளையும் சிலுவையிலே நம் அருமை ஆண்டவர் சுமந்து விட்டார் (2 கொரி 8:9)
நாம் ஐசுவரியவான்களாக இருப்பதுதான் தேவசித்தம். ஆகவே இப்புதிய நாளில் உங்கள் சகல பொருளாதார தேவைகளையும் கர்த்தர் சந்தித்து திரளாய்ப் பெருகப்பண்ணுவார் என்பதில் சந்தேகமில்லை.