வன்னிமண்ணின் பெருமை மிகு இலக்கிய வாதியான முல்லை மணி ஐயாவின் மரணம் ஈழத்து கலையுலகில் பேரிழப்பாக அமைந்துவிட்ட நிலையில் அன்னாரின் இறுதிச்சடங்கில் கூடியிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு சாட்டையடி கொடுத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது .
குறித்த மரணச்சடங்கின் இறுதியில் இடம்பெற்ற அஞ்சலிக்கூட்டத்தில் அரசியல் வாதிகள் பலர் கலந்து கொண்டு வழமைபோன்று வீரப்பேச்சு பேசிவிட்டு அமர்ந்த நிலையில் அவர்களின் முகத்தில் கரி பூசுவது போன்று உண்மைகளை உதிர்த்தார் வன்னியூர் செந்தூரன் .
அஞ்சலிக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய கவிஞர் செந்தூரன் இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தும் அரசியல் வாதிகள் முல்லைமணி ஐயா உயிரோடு இருக்கும்போது கண்டுகொள்ளவில்லை எனவும், குறிப்பாக அவர் பிறந்த முல்லை மண்ணில் தமிழ் நாட்டு கவிஞர் கவிப்பேரரசு வைர முத்துவை அழைத்துவந்து நிகழ்வு நடத்தியவர்கள் அந்நிகழ்விற்கு முல்லைமணி ஐயாவை அழைக்க கூட இல்லை எனவும், அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்விற்கு தமிழ் நாட்டை சேர்ந்த குணச்சித்திர நடிகரும் தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமாகிய நாஷரை அழைத்துவந்து நடத்திய நிகழ்விலும் ஐயாவை கண்டு கொள்ளாதவர்கள் இன்று அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள் என கூடியிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு சாட்டையடி கொடுத்தார் .
இவர் உரை நிகழ்த்திய போது அங்கிருந்த சில மக்கள் பிரதுநிதிகள் வெட்கி தலை குனிந்ததுடன் சிலர் மெதுவாக விலகி தங்களது சொகுசு வாகனங்களில் ஏறி புறப்பட்டு சென்றதாகவும் அங்கிருந்த எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார் .