ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனவரி மாதம் முல்லைத்தீவு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தினர் வசமுள்ள ஒரு தொகுதி காணிகளை விடுவித்து மக்களிடம் கையளிப்பதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்லவுள்ளார்.
ஜனாதிபதி பதவியேற்று எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதியுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாகவே கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டிடமொன்றையும் ஜனாதிபதி இதன்போது திறந்துவைப்பாரென தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 300 பேருக்கு காணி அனுமதிப் பத்திரம் வழங்கிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.