மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட களுதாவளைக் கடற்கரையிலிருந்து விமானத்தின் பாகம் என சந்தேகிக்கப்படும் உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட உதிரிப்பாகங்களை ஆய்வு செய்வதற்காக விமானப் படையினர் கொண்டு செல்லவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மட்டக்களப்புக்கு பாசிக்குடா கடற்கரையிலிருந்து வடக்கே 20 கடல் மைல் தொலைவின் ஆழ்கடல் பகுதியில் இயந்திர பாகங்கள் காணப்படுவதாக கடந்த திங்கட்கிழமை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் கடற்படையினருக்குத் தெரிவித்திருந்தனர்.
பாசிக்குடா கடற் கரையிலிருந்து 20 கடல் மைல் வடக்கு நோக்கி வங்காளக் கடலின் ஆழ்கடல் பகுதியிலேயே இவை தென்படுவதாக மீனவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த நிலையில் களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் கடலில் காணப்பட்ட உதிரிப்பாகங்களை பார்வையிட்டு அதனை விமானத்தின் பாகங்கள் என தெரிவித்தனர்.
இதனையடுத்து இன்று காலை ஸ்ரீலங்கா கடற்படை மற்றும் விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் கடலில் மீட்கப்பட்ட உதிரிப்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த உதிரிப்பாகம் விமானத்தின் பாகத்தினை ஒத்து காணப்படுவதனால் ஆய்வு செய்யும் வகையில் விமானப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் கடலில் இருந்து மீட்கப்பட்ட விமானத்தின் பாகத்தில் ரஷ்ய மொழியிலான எடுத்துக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.