திருவெம்பாவையின் 4ம் பாட்டான கண்ணுக்கினியானில் சிவபெருமானைக் குறிப்பது போல் திருப்பாவை 12ம் பாசுரமான மனதுக்கினியானில் திருமாலை குறிக்கிறது. திருவெம்பாவையில் வரும் கோழி கூவுதல், குருகு கூவுதல் போன்ற சொற்களெல்லாம் திருப்பாவையில் வரும் 4,6,12ம் பாசுரத்துடன் பொருந்தியுள்ளது. திருவெம்பாவை 8ம் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் திருப்பாவை 6,7,8ம் பாசுரங்களான புள்ளும், கீசு கீசு, கீழ் வானம் போன்றவற்றில் பொழுது விடிந்ததை தெரிவிக்கின்றன.
திருவெம்பாவை 9ம் பாடலான முன்னைப் பழம் பொருட்கும் பாடலில் உள்ள கருத்துகள் திருப்பாவையில் 29ம் பாசுரமான சின்னஞ்சிறு காலேயுடன் இசைந்துள்ளன. திருவெம்பாவையில் 16ம் பாடல் மழைப்பாட்டாக அமைந்தது போல் திருப்பாவையில் 3,4ம் பாசுரங்கள் அமைந்துள்ளன. திருவெம்பாவையில் மாணிக்க வாசகர் மின்னலுக்கு உவமானமாக உமாதேவியின் இடையைக் குறிப்பிடுகிறார். திருப்பாவையில் கோதையோ திருமாலின் சக்ராயுதத்தைக் குறிப்பிடுகிறாள்.
திருவெம்பாவையின் 8ம் பாடலான கோழி சிலம்ப வில் உள்ள வார்த்தைகளுக்கொப்ப திருப்பாவை 18ம் பாசுரமான வந்தெங்கும் கோழி உள்ளது. அதே பாசுரத்தில் கந்தம் கமழும் குழல் என்ற வாக்கியம் திருவெம்பாவையின் 17ம் பாட்டில் கொங்கு உன் கருங்குழலி எனும் வார்த்தையோடு இணையாக உள்ளது.
திருவெம்பாவையின் இறுதிப்பாட்டு போற்றி அருளுக எனும் பாடல் திருப்பாவையில் 24ம் பாசுரமான அன்றிவ்வுலகம் பாசுரத்துடன் ஒத்துள்ளது. திருவெம்பாவையின் முதல் பாடல் ஆண்டாளின் முதல் எழுத்தான ஆ வில் தொடங்குகிறது. திருப்பாவையின் முதல் பாடல் மாணிக்கவாசகரின் மா வில் தொடங்குகிறது.
வேற்றுமைகள் :
திருப்பாவை திருமாலைப் போற்றுகிறது. திருவெம்பாவை ஈசனை போற்றுகிறது.
திருப்பாவையின் 2ம் பாடல் வையத்து பாவை நோன்பைக் குறிக்கிறது. திருவெம்பாவையிலோ எங்கும் நோன்பைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை. இந்த இரு பாவைகளும் வெவ்வேறு தெய்வங்களைப் புகழ்ந்தாலும் ஒரே பொதுக்கருத்தை உடையனவாக உள்ளது. கடல் கடந்த நாடுகளான தாய்லாந்து, சுமத்ரா, ஜாவா, கம்போடியா போன்றவற்றிலும் இந்த இரு பாவைகளும் பரவியிருந்தது என்பதற்கு அந்நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளில் இவை இசைக்கப் படுவதே சான்றாகும்.