திருத்தணி முருகன் கோவிலில் வருகிற 31-ந் தேதி படி பூஜை திருவிழா நடக்கிறது. இதையொட்டி மலை கோவிலுக்கு செல்லும் பாதையில் ஆண்டின் 365 நாட்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 365 படிக்கட்டுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஒவ்வொரு படிக்கும், மஞ்சள், குங்குமம் பூசியும் கற்பூரம் ஏற்றியும் பக்தர்கள் பூஜை செய்வார்கள். அதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடியவாறு படிக்கட்டு வழியாக மலைக் கோவிலுக்கு சென்று மூலவரை வழிப்படுவர்.
விழாவை முன்னிட்டு திருத்தணி நகரின் முக்கிய பகுதிகளில், வெளியூர்களில் இருந்து வரும் பஜனை குழுவினர் இரவு முழுவதும் பக்தி இன்னிசை கச்சேரி நடத்துவார்கள். நள்ளிரவு, மூலவருக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்படும். மறுநாள், (ஜனவரி 1-ந்தேதி) புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கிறது.
படி பூஜை திருவிழா மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில், தமிழகம் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்து 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் திருவள் ளூர்மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் நடந்தது.
இதில் ஆர்.டி.ஓ. விமல்ராஜ், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் நரசிம்மன், கோவில் இணை ஆணையர் (ம) செயல் அலுவலர் சிவாஜி, போலீஸ் துணை சூப்பிரண்டு பொற்செழியன், இன்ஸ்பெக்டர் சாரதி உள்பட அனைத்து அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும். பக்தர்களின் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்குவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அந்தந்த துறைகளுக்கு கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டார்.