ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மியன்மார் பாணியிலான இராணுவ ஆட்சிக்கு முயல்வதாக சட்டத்தரணி சிரால் லக்திலக குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேர்தலில் வெற்றிபெற்றால் சர்வாதிகார ஆட்சி ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டபோதிலும் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் என சிரால் லக்திலக தெரிவித்துள்ளார்.
அரசியல்பழிவாங்கல் குறித்த குழு நாட்டின் சட்டங்களுக்கு அப்பால் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பயன்படுத்தினால் மோசமான விளைவுகள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல்பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு நாட்டின் நீதித்துறையின் அடிப்படைக்கே அச்சுறுத்தலாக காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டங்களை ஜனாதிபதி துஷ்பிரயோகம் செய்யக்கூடாது ஜனநாயக வழியிலான ஆட்சி முறையை பின்பற்றவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உரிமைகளை பறிப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட சட்டத்தரணிகள் மற்றும் அரசியல்வாதிகள் அடங்கிய குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,ஜேவிபி தலைவர் அனுரகுமார திசநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரத்பொன்சேகா, ராஜித சேனாரட்ண, உட்பட பலரின் சிவில் உரிமையை அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை பயன்படுத்தி பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என அந்தக்குழு தெரிவித்துள்ளது.