தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத எந்தவொரு தீர்வுத்திட்டத்தையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘வடக்கு- கிழக்கு இணைப்பை வலியுறுத்தியே தமிழ் மக்கள் நீண்டகாலமாக அகிம்சை போராட்டத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் தற்போது வடக்கு- கிழக்கு இணைப்பு என்பது கடினமான விடயமாகக் காணப்படுகிறது.
எனினும், வடக்கு- கிழக்கு இணைப்பை கைவிடாது நாம் தொடர்ந்தும் மாற்று வழிகளினூடாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அணுகுமுறைகளை முன்னெடுப்போம். வடக்கு- கிழக்கு இணைப்பின்றி தீர்வை ஏற்கப் போவதில்லை.
மேலும், அரசியலமைப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இறுதி அறிக்கையில் தமிழ் மக்களுக்கு சாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத எந்தவொரு தீர்வுத்திட்டத்தையும் நாம் ஒருபோதும் ஏற்கமாட்டோம்’ என்றார்.