2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆட்சியாளர் (ஜனாதிபதி) தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடவேண்டுமென சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அண்மையில் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பிபிசி சந்தேசிய சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்காவில் 27 வீதமான சிறுபான்மையினர் வசிக்கின்றனர். நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறக்கூடிய ஒரேயொரு தலைவராக மைத்திரிபால சிறிசேனவே விளங்குகின்றார்.
2015ஆம் ஆண்டு 9ஆம் நாள் அவர் பதவியேற்கும்போது தான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையென அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அவ்வாறான அரசியல் சூழ்நிலை இல்லை. எனவேதான் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலிலும் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.
அத்துடன், இந்தக் கூட்டத்துக்கு மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்கியிருந்தபோதிலும் அவர் இது தொடர்பான எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.
அத்துடன், மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து, 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு முடிவு செய்துள்ளது.
தற்போதைய அரசியலமைப்பு மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், ஆனால், புதிய அரசியலமைப்புக்கு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட தேவையில்லை என்றும் மத்திய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.