நடிப்பு துறையில் யாரோடும் நான் போட்டியில் இல்லை என பாலிவுட் கதாநாயகன் அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமீர் கான் கூறியதாவது:-
நான் யாரோடாவது போட்டியிடுகிறேன் என்றால், அது என்னோடு நான் போட்டியிடுவதாக மட்டுமே இருக்க முடியும். இதை வைத்து, ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோரை நான் பெரிய நடிகர்களாக மதிக்கவில்லை என்று அர்த்தப்படுத்த கூடாது. அவர்கள் பிரமாதமானவர்கள்.
அவர்கள் மட்டுமல்ல, அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்பிர் கபூர், ரன்பிர் சிங், ஹிரிதிக் ரோஷன் போன்றவர்களும் உயர்ந்த நடிகர்கள்தான். பிறருடைய நல்ல வேலையை பார்த்து அவர்களுடன் போட்டியிட நினைக்க மாட்டேன்.
‘சுல்தான்’, ‘தபாங்’ ஆகியப் படங்களை பார்த்தபோது அவற்றை மிகவும் விரும்பி, ரசித்தேன். ‘முன்னாபாய்’ படத்தை பார்த்தபோது சஞ்சய் தத்தை விரும்பினேன். எனது சகநடிகர்கள் சிறப்பாக நடிக்கும்போது நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் உழைப்பு என்னை ஊக்கப்படுத்துகிறது.
போட்டியிடுவது என்பது ஒரு விசித்திரமான உலகம். யாரோடும் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை. என்னோடு போட்டியிட மட்டுமே முயற்சித்து வருகிறேன். என்னை நானே சிறப்பாக்கிக் கொள்ள முயற்சித்து வருகிறேன். ஒரு படைப்பாளியாக, ஒரு கலைஞனாக என்னை முன்னேற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். வர்த்தக ரீதியாக இல்லாமல் ஒரு படைப்பாளியாக சிறந்ததை செய்யவும் முயற்சித்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.