வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அரச அதிகாரிகளுக்கு மேலதிகமாக முப்படையினரையும் இணைத்துக் கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சீனக்குடா விமானப் படைத்தளத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றி ஜனாதிபதி, ‘வரட்சியால் பாதிக்கப்பட்டு பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கிவரும் மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக குடிநீர் வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பில் படையினர் பெரும் பங்காற்றி வருகின்றனர். அதேபோன்று மக்களின் துயரை துடைப்பதிலும் அவர்களின் சேவை சிறப்பானதாகும்.
நாட்டின் ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியிலும் நாட்டின் வீரர்கள் மீது முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன். அதன்படி அவர்கள் நாளைய சவால்களை எதிர்க்கொள்ள தொழில்சார் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவை அரசாங்கம் பெற்றுக்கொடுக்க கடமைப்பட்டுள்ளது’ என்றும் குறிப்பிட்டார்.