இலங்கை தமிழ் அரசு கட்சி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தனியான கடிதம் எதுவும் அனுப்பவில்லை. தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் சட்டநடவடிக்கையெடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று (10) யாழில் செய்தியாளர்களிடம் பேசிய போது இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தமிழ் அரசு கட்சி தனியாக எந்த ஆவணத்தையும் அனுப்பவில்லை. கூட்டமைப்பின் பொறுப்பன பங்காளிக்கட்சியாக செயற்பட்டுள்ளது. நேற்றைய தினம் இணையமொன்று ஒரு ஆவணத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஒன்பது பேர் கையெழுத்திட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்கள் என கடித தலைப்பிடப்பட்டுள்ளது. அப்படியொரு அமைப்பு இருப்பதாக எனக்கு தெரியாது. அப்படியொரு அமைப்பு ஒரு காலமும் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கும் தெரியாது, எவருக்கும் தெரியாது.
அதில் கைச்சாத்திடப்பட்டதாக சொல்லப்பட்ட சிலர், தாம் அப்படியொன்றும் அனுப்பவில்லையென முதல்நாளே மறுப்பறிக்கை பத்திரிகைகளிற்கு வெளியிட்டு விட்டனர்.
அதனால் வெளியான ஆவணத்தின் உண்மைத்தன்மை எமக்கு தெரியாது. உண்மையானதா, யாராவது கையெழுத்தெல்லாம் போட்டு தயாரித்தார்களா என்பது தெரியாது.
வேறு சிலர் எமக்கு தெட்டத்தெளிவாக சொல்லியுள்ளனர், ஐநாவிற்கு அனுப்பிய பழைய ஆவணங்களில் இருந்து எமது கையெழுத்தை பெற்றார்களா என்பது தெரியவில்லையென்றும் சொல்லியுள்ளனர்.
இதெல்லாம் மிக தீவிரமான விடயங்கள். ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கையெழுத்தை பாவிப்பது குற்றவியல் நடவடிக்கை.
அதன் உண்மைத்தன்மை தெரியாத வரைக்கும் இப்போது வரை நாம் எதுவும் சொல்ல முடியாது.
தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என தலைப்பிடப்பட்டாலும், அதில் உள்ளூராட்சி உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இது மிக பாரதூரமான விடயம். நாம் சட்டநடவடிக்கையெடுக்க நேரிடும் என்றார்.