பிரித்தானிய நாட்டில் கடந்தாண்டு மட்டும் சிறைச்சாலைகள் 119 கைதிகள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய சட்ட அமைச்சகம் இன்று வருடாந்திர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 2016-ம் ஆண்டு மட்டும் 119 கைதிகள் தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிவித்துள்ளது.
சிறையில் உயிரிழக்கும் கைதிகள் தொடர்பாக கடந்த 1978-ம் ஆண்டு முதல் புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த பணி தொடங்கியது முதல் கடந்தாண்டு மட்டுமே அதிகளவில் கைதிகள் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
2015-ம் ஆண்டில் சிறையில் உயிரிழந்தவர்களை ஒப்பிடுகையில் கடந்தாண்டு 29 பேர் அதிகமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
இதுமட்டுமில்லாமல், கடந்தாண்டு மட்டும் சிறைச்சாலைகளில் கைதிகள் தங்களையே காயப்படுத்திக்கொண்ட 37,784 சம்பவங்களும், பிற கைதிகளை தாக்கிய 25,049 சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்த புள்ளிவிபரங்கள் குறித்து பேசிய சட்டத்துறை செயலாளரான Liz Truss ‘இது மிகவும் ஆபத்தான திசையை நோக்கி செல்கிறது.
சிறைச்சாலையில் தற்கொலை மட்டும் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மேலும், சிறைச்சாலையின் மேம்பாட்டு பணிகளுக்காக கூடுதலாக 100 மில்லியன் பவுண்ட் ஒதுக்கீடு செய்துள்ளதுடன், கூடுதலாக 2,500 சிறைக் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.