ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பலவீனமான முகாமைத்துவம் காரணமாக நாட்டில் 12 மணிநேர மின்வெட்டு ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இருளில் தத்தளிக்க வேண்டிய நிலைமை வெகுவிரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ளற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க(Campikka raṇavakka) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், டிசம்பர் மாதத்திற்குள் மசகு எண்ணெய் கொள்வனவு செய்யாவிடின் மின்வெட்டு அபாயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது என எச்சரித்துள்ளார்.
“சப்புகஸ்கந்த விநியோக கேந்திர நிலையமொன்றை அமைப்பதற்கு கடந்த ராஜபக்ச அரசாங்கம் அடிக்கல் நாட்டியது. ஆனாலும் அதனை ஆரம்பிக்க முடியாமல் ஸ்ரீலங்கா அரசாங்கம் தடுமாறியது. இப்போது மன்னாரில் பெற்றோலிய வளம் இருப்பதாகவும் அதனை பெறுவதற்கு முயற்சி செய்யப்போவதாகவும் கோட்டாபய அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.
இருப்பினும் மன்னாரில் கனியவளம் இருப்பதை 1961ஆம் ஆண்டில் இலங்கரத்ன தெரிவித்திருந்தார். 1970 களிலும் இது பற்றிய அறிவிப்புக்கள் வந்தன. மன்னாரில் கனியவளம் இருப்பது மக்களுக்கும் தெரிந்தவிடயம்தான். மிகச்சிறிய அளவிலான கனியவளம் 2010ஆம் ஆண்டிலும் கூட மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளனர். வருகின்ற டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக மசகு எண்ணெயை ஸ்ரீலங்கா அரசாங்கம் இறக்குமதி செய்யாவிட்டால் விநியோகம் ஸ்தம்பிக்கப்படும். ஸ்ரீலங்கா மின்சார சபைக்கு 200 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்படும், நிலக்கரி கொண்டுவராவிட்டால் 12 மணிநேர மின்வெட்டு ஏற்படவும் வாய்ப்பு இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.