கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் சிக்கி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்த குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த ரபீஸ் பாத்திமா நபாவின் (வயது – 06) ஜனாசா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
தனது தாயுடன் பாடசாலைக்குச் செல்வதற்காக படகில் பயணித்த வேளையில் இந“த அனர்த்தம் இடம்பெற்றிருந்தது. அவரது தாய் உயிர் தப்பிய நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தாயார் கருத்து வெளியிடுகையில் “எனது பிள்ளை சம்பவம் நடந்து ஆறு நாட்களாக கண்களை திறக்கவில்லை. திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து இரவு மரணித்ததாக சொன்னார்கள்” என குறித்த பிள்ளையின் தாயான என்.பர்வீன் ஆழ்ந்த சோகத்துடன் கண்ணீர் விட்டழுதார்.
உயிரிழந்த சிறுமியின் ஜனாசா கிண்ணியா நடுத்தீவு பொது மையவாடியில் இன்று(28) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த படகு விபத்தில் ஐந்து மாணவர்கள் உட்பட ஏழு பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.