பெப்ரவரி 7ஆம் திகதி முதல் 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை இடம்பெறவுள்ளதால், அதனை இலக்காகக்கொண்ட பிரத்தியேக வகுப்புகள் அல்லது பயிற்சிகளை நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன (L.M.D Dharmasena) தெரிவித்தார். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள அவர்,
பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ள நிலையில், “ஒரு நபர் அல்லது ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறினால், அருகிலுள்ள காவல் நிலையம், பரீட்சைகள் திணைக்களம் அல்லது பின்வரும் இலக்கங்களுக்கு (காவல்துறை தலைமையகம் : 0112421111, காவல்துறை அவசர இலக்கம் : 119, பரீட்சைகள் திணைக்களம் : 1911, பாடசாலை பரீட்சைகள் ஏற்பாட்டுக் கிளை : 0112784208 / 0112784537) முறைப்பாடு அளிக்கலாம்”.
பாடம் சார்ந்த கருத்தரங்குகள் அல்லது வகுப்புகளை ஏற்பாடு செய்தல், நடத்துதல், பரீட்சை சார்ந்த வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் மாதிரி வினாத்தாள்களை வழங்குவதாகக் கூறி மின்னணு ஊடகங்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் மூலம் விநியோகம் மற்றும் விளம்பரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்தார்.








































