ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனங்கள் பட்டியலில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனம் இருக்கிறது.
இதே போன்று ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் பரிவிலும் ஆப்பிள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருப்பதோடு, ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் போன்ற சாதனங்கள் பிரிவிலும் ஆப்பிள் தொடர்ந்து அதிரடியான விற்பனையை பதிவு செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியிடப்பட்டது. இதன் காரணமாகவே ஏர்பாட்ஸ் ப்ரோ 2 விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்திற்குள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல் சுமார் 40 லட்சத்திற்கும் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் மட்டும் 2 கோடியே 38 லட்சம் அணியக்கூடிய சாதனங்களை விற்பனை செய்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் சந்தையில் 30.9 சதவீத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது ஆப்பிள் நிறுவனம் 34 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவற்றில் சுமார் 42 லட்சம் யூனிட்கள் ஏர்பாட்ஸ் ப்ரோ 2 ஆகும். இரண்டாம் தலைமுறை ஏர்பாட்ஸ் ப்ரோ மாடல் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் 2 ப்ரோ மாடல் இந்த காலாண்டில் சரிவை சந்தித்துள்ளது.