- போக்குவரத்துக்கு இடையூறாக பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர்.
- பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவான துணிவு திரைப்படம் இன்று (புதன் கிழமை) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் 6 தியேட்டர்களில் இன்று அதிகாலை 1.30 மணிக்கு ரசிகர் மன்றத்தினருக்கு சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த திரையரங்குகள் முன்பு இரவு 11 மணி முதல் ரசிகர்கள் திரள தொடங்கினர். திருச்சி மாரிஸ் பாலம் அருகாமையில் உள்ள தியேட்டரிலும் துணிவு திரைப்படம் நள்ளிரவு திரையிடப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் அங்கு குவிந்தனர்.
பின்னர் அவர்கள் படம் திரையிடுவதற்கு முன்பாக நள்ளிரவு 12.30 மணி அளவில் போக்குவரத்துக்கு இடையூறாக மாரிஸ் பாலத்தில் நின்று கொண்டு அந்த வழியாக சென்ற பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை கைகளால் தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் ஒரு ஆட்டோவின் மீது ஐந்துக்கும் மேற்பட்டோர் ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதில் அந்த ஆட்டோ சேதம் அடைந்தது. இதற்கிடையே அந்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சாலையின் இரு பக்கங்களிலும் பாலத்தில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்து நின்றது. அதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்ற கோட்டை போலீசார் ரசிகர்களை கலைந்து செல்லும்படி எச்சரிக்கை விடுத்தனர். இருந்தபோதிலும் வாண வேடிக்கைகளை நாலாபுறமும் திருப்பி விட்டு வெடிக்க செய்ததாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். போலீசாரின் அதிரடியால் ரசிகர்கள் அங்கும் இங்குமாக சிதறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் திட்டமிட்டபடி நள்ளிரவு காட்சி அந்த தியேட்டரில் திரையிடப் பட்டது. இந்த போலீஸ் தடியடியில் பத்துக்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்களுக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. மேலும் இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியது.