அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் எலைன் லௌபேச்சர் ஆகியோர் இலங்கையில் இரண்டு முக்கிய குழுக்களை சந்தித்து, இலங்கையின் பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் நேற்று(12.01.2023) இடம்பெற்றுள்ளது.
இரண்டு முக்கிய குழுக்களுடன் சந்திப்பு
இலங்கையின் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு முதலில் இடம்பெற்றது.
இதில், தூதுவர் மற்றும் வருகை தந்த அதிகாரி ஆகியோர், இலங்கையின் அனைவரதும் உரிமைகள் மதிக்கப்படும் வகையில், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள், இலங்கையில் உள்ள சிந்தனைக் குழுக்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளனர்.
பொருளாதார நிலைமை
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் அதன் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்த குழுவின் ஒட்டுமொத்த மதிப்பீட்டைக் கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
இந்தநிலையில், நிலையான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கையின் தற்போதைய நிதிக் கடப்பாடுகள் குறித்த நிபுணர் கருத்து மிகவும் முக்கியமானது என அமெரிக்க தூதுவர் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.