- இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை நடக்கிறது.
- கடைசி ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகளுக்கு இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி இருந்தது.
இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி இருந்தது. கவுகாத்தியில் நடந்த முதல் ஆட்டத்தில் 67 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று இருந்தது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்த ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட் வாஷ் செய்யும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணி சம பலத்துடன் திகழ்கிறது. இதனால் முதல் 2 போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி இருந்தது. இந்த ஆட்டத்திலாவது இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்த அவர் இலங்கைக்கு எதிரான முதல் போட்டிக்கு 11 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படவில்லை. பேட்டிங்கில் விராட் கோலி, லோகேஷ் ராகுல், கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோரும், பந்து வீச்சில் முகமது சிராஜ், உம்ரான் மாலிக், குல்தீப் யாதவ் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி இந்தியாவை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. ஆறுதல் வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாக போராடுவார்கள்.
இரு அணிகளும் நாளை மோதுவது 165-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 164 பேர்டியில் இந்தியா 95-ல், இலங்கை 57-ல் வெற்றி பெற்றுள்ளன.
ஒரு போட்டி ‘டை’ ஆனது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிசனில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.