கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களுடன் இன்று(07.03.2023) இரண்டு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த பூச்சி கொல்லி மருந்துகள், அழகு சாதன பொருட்களை மரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆய்வாளர் கனகராஜ் தலைமையில் தேவிபட்டினம் சார்பு ஆய்வாளர் ஐயனார் ஆகியோருடன் காவலர்கள் ரோந்து சென்று கோப்பேரிமடம் சோதனை சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கடத்தல் நடவடிக்கை
இதன்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.
அதில் இருந்த 20 மூட்டைகளை பிரித்து பார்த்த போது, 450 கிலோ பூச்சி கொல்லி மருந்துகள், 125 கிலோ அழகு சாதன பொருட்கள் கை கடிகாரம் பேன்ஸி பொருட்கள் இருந்ததுடன் அவற்றை எடுத்துச் செல்ல எவ்வித ஆவணங்கள் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வாகனத்தில் இருந்த 2 பேரிடம் நடத்திய விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இருவரையும் மரைன் காவல் நிலையம் அழைத்து சென்று பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது.
அதை தொடர்ந்து பறிமுதல் செய்த பொருட்களை சரக்கு வாகனத்துடன் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டதுடன் சரக்கு வாகனம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் ராமநாதபுரம் சுங்கத்துறையினர் இடம், மரைன் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.