போலி விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற இரண்டு பங்களாதேஷ் பிரஜைகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் 50 மற்றும் 24 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
டுபாயில் இருந்து பயணித்து
சந்தேகநபர்கள் இருவரும் சிறிலங்கன் விமான சேவையில் டுபாயில் இருந்து பயணித்து அதிகாலை 5.00 மணியளவில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் இலங்கைக்குள் நுழைவதற்கான ஆவணங்களை விமான நிலைய குடிவரவு அதிகாரியிடம் வழங்கியபோது, அவர்களது இரண்டு கடவுச்சீட்டுகளில் இருந்த விசாக்கள் சட்டவிரோதமாக அகற்றப்பட்டதை கவுண்டரில் இருந்த அதிகாரி கவனித்தார்.
அந்த அதிகாரி இருவரையும் தலைமை விமான நிலைய குடிவரவு அதிகாரியிடம் அனுப்பினார், அவர் இரண்டு பங்களாதேஷிகள் சமர்ப்பித்த ஆவணங்களை சரிபார்த்து எல்லை கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளிடம் பரிந்துரைத்தார். அதிகாரிகள் அவர்களது பயணப் பொதிகளை சோதனையிட்டதில் அவர்களது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அவர்களது கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு அவுஸ்திரேலிய வீசாக்களின் புகைப்படங்கள் காணப்பட்டன.
மேலதிக விசாரணை
குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் சில நிமிடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட இரண்டு போலி விசாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தவிர, குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் அவர்களது பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலத்திரனியல் விசாக்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
பிரதான குடிவரவு அதிகாரியின் அறிவுறுத்தல்கள் மற்றும் மேற்பார்வையின் கீழ் குடிவரவு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.