பிரான்சில் நடந்த திருவிழாவின் போது, எதிர்பாரத விதமாக பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதால் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், 5 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரான்சின் பாரிசில் உள்ள Villepinte பகுதியில் நடந்த யேல்லோ என்ற திருவிழாவின் போது மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும், பலர் உயிருக்கு போராடிவருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து கூறுகையில், பிரான்சில் நடத்தப்படும் இந்த திருவிழாவில் கேளிக்கையான நிகழ்வுகள் சில நடைபெறும். அது போன்று தான் 20 அடி உயரமுள்ள பொம்மை ஒன்றை வைத்து அதில் கட்டைகள் மற்றும் சில பொருட்கள் வைக்கப்பட்டு, பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
தீப்பற்றி எரிந்த அந்த பொம்மை திடீரென்று கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி வெடித்துள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தின் போது சில குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்வதற்கு ஓடியுள்ளனர். இந்த விபத்து தொடர்பான விடியோவும் வெளியாகியுள்ளது.
மேலும் இது ஒரு எதிர்பாராத விபத்து தான் என்றும், இது தீவிரவாத தாக்குதல் கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.