மட்டக்களப்பு, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ஏறாவூர் நகரப் பகுதியில் இரண்டரை மாத சிசு தாய்ப்பால் புரைக்கேறியதன் காரணமாக உயிரிழந்திருப்பதாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏறாவூர் பழைய சந்தை வீதியைச் சேர்ந்த சலீம் பாத்திமா சபா எனும் பெண் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நேற்று இரவு சிசுவுக்கு தாய் பாலூட்டியதன் பின்னர் தாயும், சேயும் தூக்கத்தில் இருந்துள்ளனர்.
நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி தாய் தூகக்ம் கலைந்து கண் விழித்து சிசுவைப் பார்த்ததும் சிசு அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.
இதன்போது உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் சிசு ஏற்கனவே இறந்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகபிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.