ஜேர்மனி நாட்டில் உள்ள விமான நிலையத்தில் பயணி ஒருவர் தங்க கிரீடத்தை எடுத்துச் செல்ல முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Dusseldorf விமான நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் ஈரான் நாட்டை சேர்ந்த 43 வயதான பயணி சென்றுள்ளார்.
பயணியிடம் சந்தேகத்திற்குரிய நடவடிக்கை காணப்பட்டதால் அவரை தடுத்து நிறுத்தி பொலிசார் சோதனை செய்துள்ளார்.
அப்போது, ஒரு பெட்டியில் 18 காரட் தங்க கிரீடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 126 கிராம் ஆகும்.
மேலும், ஒரு பெட்டியில் 600 சிகரெட்டுகளும் இருந்துள்ளதை கண்டு பொலிசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
இது குறித்து பயணியிடம் விசாரணை செய்தபோது ‘இந்த தங்க கிரீடம் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டது என்றும், பெல்ஜியம் நாட்டில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சியில் மணமகனுக்கு இதனை பரிசாக கொடுக்க கொண்டு செல்வதாக’ கூறியுள்ளார்.
ஆனால், பயணியிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத நாட்டில் இருந்து ஜேர்மனி நாட்டிற்குள் பொருட்களை கொண்டு வர சில கட்டுப்பாடுகள் உள்ளன.
இதன் அடிப்படையில், பயணிகள் 200 சிகரெட்டுகளுக்கு மேல் கொண்டு செல்லக் கூடாது. மேலும், 430 யூரோ மதிப்புள்ள பொருட்களுக்கு மேல் கொண்டு வரக் கூடாது. பயணி கொண்டு வந்த தங்க கிரீடத்தின் மதிப்பு 3,500 யூரோ எனக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் பயணியின் மீது விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சரக்கு கொண்டு செல்வதற்கான 850 யூரோவை பயணி முறையாக செலுத்துவிட்டதால் அவர் கொண்டு வந்த பொருட்களுக்கு பொலிசார் அனுமதி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.