பிரான்ஸ் நாட்டில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் குழந்தைக்கு பாலூட்டிய தாயார் ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் அவமதித்துள்ள சம்பவம் பலத்த கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் தான் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் ஒரு விசாரணைக்காக தாயார் ஒருவர் தனது கணவர் மற்றும் 2 மாதக் குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின்னர் குழந்தை பசியால் அழுததும் தாயார் குழந்தைக்கு காவல் நிலையத்திலேயே தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
இக்காட்சியை கண்டு ஆத்திரம் அடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக வந்து ‘காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க கூடாது.
இது காவல் நிலைய சட்டவிதிகளுக்கு எதிரானது’ என எச்சரிக்கை விடுத்த பொலிஸ் அதிகாரி தாயாரையும் அவரது கணவரையும் கட்டாயப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.
காவல் நிலையத்தில் பசியால் துடித்த குழந்தைக்கு பாலூட்டியதை தடுத்தது மட்டுமின்றி தன்னையும் அவமதித்த பொலிஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக தாயார் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மனைவி சந்தித்த அவமானம் தொடர்பாக அவரது கணவர் பேஸ்புக்கில் தகவல் ஒன்றை வெளிட்டதை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிக்கு கண்டனம் வலுத்து வருகிறது.
பெண்கள் பொது இடங்களில் தாய்ப்பால் கொடுக்க எவ்வித தடையும் இருக்க கூடாது என தற்போது கையெழுத்து போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் தற்போது வரை 15,000 பேர் வரை இணைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டு சட்டப்படி பொது இடங்களில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க எவ்வித தடையும் இல்லை.
ஆனால், பெரும்பாலான பெண்கள் இதில் ஈடுப்பட தயக்கம் காட்டுவதால் இச்சட்டத்தைப் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.