பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக இமானுவேல் மக்ரோங் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்றார். குறித்த பதவியேற்பு நிகழ்வு எலிசீ மாளிகையில் நடைபெற்றது.
அதன்போது உரையாற்றிய மக்ரோங், “இழந்துபோன தன்னம்பிக்கையை பிரான்ஸ் மீளப்பெறும் என நான் உறுதியளிக்கின்றேன்” என தெரிவித்தார்.
அத்துடன், தனது ஆட்சிக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கைகள் சீர்திருத்தப்படும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இளவயதிலேயே பிரான்ஸின் ஜனாதிபதியாகிய பெருமை மக்ரோங்கையே சாரும். பிரான்ஸில் நடத்தப்பட்ட இரண்டாவது சுற்று வாக்கெடுப்பின் போது, மக்ரோங் 65 தொடக்கம் 66.1 சதவீதத்திற்கு இடைப்பட்ட வாக்குகளை பெற்றார்.
மக்ரோங்குடன் போட்டியிட்ட தீவிர வலதுசாரி தேசியவாதியான மரின் லெ பென் (Marine Le Pen), 33.9 மற்றும் 35 சதவீதத்திற்கு இடைப்பட்ட வாக்குகளைப் பெற்றார்.
பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலன்டின் ஆட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பின்மை மேலோங்கி காணப்பட்டதைத் தொடர்ந்து பல பிரான்ஸ் மக்கள் அவரது ஆட்சி தொடர்பில் அதிருப்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.