ஜெர்மனியின், ஹேம்லின் நகரில் மனைவியை கொடூரமாக சித்ரவதை செய்த கணவனுக்கு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
துருக்கியை சேர்ந்த காடர் என்ற பெண்ணை, ஜெர்மனை சேர்ந்த நூரட்டின் என்பவர் இஸ்லாமிய முறைப்படி கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நூரட்டின் தனது மனைவியை கடுமையாக தாக்கியும் கெட்ட வார்த்தைகளால் திட்டியும் வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனாலும் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் அதிகரித்து வந்துள்ளது.
இதனை தொடர்ந்து 2015ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ துவங்கினர். அதன் பின்னர் ஏற்பட்ட பணப் பிரச்சனையில் காடருக்கு நூரட்டின் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்போது, நூரட்டின் கத்தியால் காடரரை தாக்கியுள்ளார். மேலும் ஆத்திரம் அடங்காத நூரட்டின் காடரின் கழுத்தில் கயிறை கட்டி தனது வாகனத்தில் இணைத்து அவரது குடியிருப்பு பகுதியில் தர தரவென இழுத்து சென்றுள்ளார்.
சில அடி தூரங்கள் சென்ற நிலையில் கயிறு துண்டானதால் காடர் உயிர் பிழைத்துள்ளார். ஆனால் ஒருவார காலம் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார்.
காடரை கயிற்றில் கட்டி இழுத்துச் சென்றபோது அவரது குழந்தையானது வாகனத்தின் பின்னிருக்கையில் இருந்துள்ளது.
கணவரின் இந்த கொடூர தாக்குதலில் மூளையில் பாதிப்படைந்துள்ள காடர் கடந்த 6 வாரங்களுக்கு முன்னர்தான் மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் நூரட்டினுக்கு 14 ஆண்டுகள் சிறையும் ரூ.100,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.