‘20 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை அரசு வழங்கவுள்ள நிலையில் அதன் வயதெல் லையை 35 வயதில் இருந்து 45 வயதாக அதிகரிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் வைத்த கோரிக்கையை தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டார்’’ இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
‘‘20 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பை வழங்கவுள்ள நிலையில் அதன் வயதெல்லையை 35 வயதில் இருந்து 45 வயதாக அதிகரிக்க வேண் டும் உள்ளிட்ட தற்போதைய 5 அவசர விடயங்கள் தொடர்பில் இன்று ( நேற்று ) தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து வலியுறுத்தி னோம்.
நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கவுள்ள நிலையில் அவர்களுக்கான வயதெல்லையை 35 வயது என்பதனை வடக்கு – கிழக்கில் 45 வயதாக அதிகரிக்க வேண்டும். அதேபோன்று அந்த எண்ணிக்கையில் போரால் பாதித்த எமது மாகாணங்களுக்கு அதிகமாக வழங்கப்பட வேண்டும்.
முன்னாள் போராளிகள் பல்லாயிரக்கணக்கில் வேலை வாய்ப்பு இன்றி பெரிதும் சிரம்ப்படுவதனால் அவர்களின் தகமைக்கேற்ப வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.
வடக்கு – கிழக்கில் இடம்பெற்ற போர் காரணமாக 80 ஆயிரம் பெண்கள் குடும்பத் தலைவர்களாக வாழ்கின்றனர். இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதார நெருக்கடியில் உள்ளனர். அவர்களுக்காக உடனடி வேலை வாய்ப்புக்கு வடக்கில் இரு தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
யாழ்ப்பாணம் பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரம் உயர்த்தி பலாலிக்கும் சென்னைக்கும் இடையே வானூர்தி சேவை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
அந்தப் பணிக்காக இந்திய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் மேலதிக காணி சுவீகரிக்காமலேயே பிராந்திய வானூர்தி நிலையமாக தரம் உயர்த்த முடியும் என அறிக்கையிட்டிருந்தார். எனவே மேலதிகமாகக் காணிகளைச் சுவீகரிக்காது பிராந்திய வானூர்தி நிலையம் அமைக்கப்படவேண்டும்.
காங்கேசன்துறை சீமேந்து ஆலையில் உற்பத்தியை மேற்கொள்ளாது அதில் பொதி செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளுதல் அல்லது வேறு பணிக்காக தொழிற்சாலையை இயக்க வேண்டும். ஆகிய 5 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தோம்.
அவற்றுக்கு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில்,
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்கான வயதெல்லையை 35 வயதில் இருந்து 45 வயதாக அதிகரிக்குமாறு உடனடியாக பொது நிர்வாக உள்நாட்டுஅலுவல்கள் அமைச்சுக்கு உத்தரவிடப்படும்.
பலாலி வானூர்தி நிலையத்துக்கான அபிவிருத்திக்குரிய நடவடிக்கை விரைவு படுத்தப்படும். அதேபோல் வடக்கில் இரு ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்க ஏற்பாடு செய்யப்படும். அந்தத் தொழிற்சாலைகளில் பெண்களைத் தலமைத்துவமாக கொண்ட குடும்பங்கள் உள்வாக்கப்படும்.
அதேநேரம் முன்னாள் போராளிகளுக்கும் ஓர் பொருத்தமான பொறிமுறையை விரைவில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் – என்றார்.
இந்தச் சந்திப்பில் என்னுடன் நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரனும் பங்குகொண்டிருந்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா மேலும் தெரிவித்தார்.