நாடாளுமன்ற உறுப்பினர்களில் கீதா குமாரசிங்கவுக்கு மாத்திரமே இரட்டை குடியுரிமை இருப்பதாக குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் யார் இரண்டு நாடுகளின் குடியுரிமைகளை கொண்டுள்ளனர் என்ற விடயம் கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது.
இதன் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெப்ரல் அமைப்பு, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திடம் தகவல்களை கோரி விண்ணப்பம் செய்திருந்தது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றுடன் கூடிய பட்டியலை நாடாளுமன்ற செயலாளரிடம் இருந்து வரவழைத்து ஆராய்ந்துள்ளார்.
இதனடிப்படையில், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கீதா சமன்மலி குமாரசிங்கவுக்கு மாத்திரம் 17096 என்ற இலக்கம் கொண்ட இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் அறிவித்துள்ளார்.
ஏனைய 224 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டை குடியுரிமைகளை கொண்டிருக்கவில்லை என தமக்கு தெரியப்படுத்தப்பட்டதாக ரோஹன ஹெட்டியராச்சி குறிப்பிட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.