வடமாகாணத்தில் புகையிரத விபத்துக்கள் அதிகரித்திருக்கும் நிலையில் புகையிரத கடவைகள் இல்லாத இடங்களில் புகையிரத கடவைகளை அமைத்து அவற்றுக்கு பாதுகாப்பு ஊழியர்களை நியமிப்பதற்கு புகையிரத திணைக்களம் மற்றும் மாவட்ட செயலர்களுடன் முதலமைச்சர் கலந்து பேசவேண்டும் என வடமாகாண சபையில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபையின் 103வது அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன்போது வடமாகாணத்தில் புகைரத விபத்துக்கள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரும் விசேட கவனயீர்ப்பு ஒன்றை மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா சபைக்கு கொண்டுவந்தார்.
மேற்படி கவனயீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே மேற்படி கோரிக்கை முதலமைச்சரி டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
விசேட கவனயீர்ப்பை சபைக்கு முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கையில்,
வடமாகாணத்தில் புகையிரத விபத்துக்கள் அதிகரிக்கின்றன. பெரும்பாலான இடங்களில் புகையிரத கடவைகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் இல்லாமையினாலேயே இவ்வாறான விபத்துக்கள் நடக்கின்றன.
எனவே புகைரத கடவைகளையும், பாதுகாப்பு ஊழியர்களையும் பிரதேச சபைகள் ஊடாக நியமிக்க நடவடிக்கை எடுங்கள்.
மேலும் பொலிஸ் திணைக்களத்திற்கு புகைரத கடவை பாதுகாப்பு ஊழியர்களை நியமிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
நான் அறிந்தவரை யாழ்ப்பாணத்தில் 2 இடங்களில் அவ்வாறு ஊழியர்கள் போடப்பட்டுள்ளபோதும் அங்கே ஒழுங்கில்லை என்றார். தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் பேசும்போது மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள்.
எனவே உடனடியாக புகையிரத கடவைகளையும், பாதுகாப்பு ஊழியர்களையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பிரதேச சபைகளிடம் அதற்கான பணம் இல்லாவிட்டால் இந்திய அரசாங்கத்திடம் அதனை கேட்கலாம் எனவும்கூறினார்.
இதேவேளை மாகாணசபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் பேசும்போது இந்தியாவில் நிராகரிக்கப்பட்ட புகை ரத சமிக்ஞைகள் இங்கே பயன்படுத்தப்படுகின்றது. அவை நீக்கப்பட வேண்டும்.
மேலும் இதுவரை 35 உயிரிழப்புக்கள் நடந்துள்ள நிலையில் உடனடியாக புகைரத விபத்துக்கள் தடுக்கப்பட வேண்டும் என்றார்.
இந்நிலையில் இந்த விசேட கவனீர்ப்பு முதலமைச் சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கவனத்திற்கு விடப்பட்டுள்ளது.