கடற்படை தளபதி ட்ரவிஸ் சின்னையாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட தனது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார்.
குற்ற விசாரணை பிரிவில் கடற்படை தளபதி ட்ரவிஸ் சின்னையா வழங்கியுள்ள வாக்குமூலம் ஒன்று தொடர்பிலேயே இவ்வாறு நட்டஈடு கோரி முன்னாள் கடற்படை தளபதி கடிதம் அனுப்பியுள்ளார்.
தனக்கும், தனது குடும்பத்தினருக்கு எதிராகவும் அவதூறு பரப்பும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக கடற்படை தளபதி ட்ரவிஸ் சின்னையாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை சித்திரவதை முகாமில் சந்தேகநபர்கள் கொலை செய்யப்பட்டதாகவும், இது குறித்து அப்போதைய கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்ததாகவும் தற்போதைய கடற்படை தளபதி ட்ரவிஸ் சின்னையா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பொய்யானது என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 13ஆம் திகதி குறிப்பிடப்பட்டு குறித்த நிபந்தனை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியமைக்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வழங்கத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.