தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி விவகாரங்கள் அமைச்சினால் இணைத்துக்கொள்ளப்படவிருக்கும் இருபதாயிரம் பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் தகவல் வெளியாகியிருக்கின்றது.
இது தொடர்பாக குறித்த இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தியானது பின்வருமாறு அமைந்துள்ளது.
”தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளப்படும் அபிவிருத்தி உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படவுள்ளன.
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய 20 ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.இவர்கள் பிரதேச செயலக அலுவலங்களில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள்”.
அரசாங்கத்தின் பொருளாதார வலய வேலைத்திட்டத்தை பிரதேசமட்டத்தில் அமுலாக்குவது நியமனம் பெறுவோரின் பிரதான பணியாக அமையுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும், இந்த நியமனத்திற்கான விண்ணப்பங்கள் அரசாங்கத்தால் கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கான முடிவுத் திகதியும் அடுத்த மாதம் எட்டாம் திகதி எனக் குறிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த வாரம் வழங்கப்படும் என்று அரச இணையத்தளத்தில் வெளியான செய்தியால் பட்டதாரிகளிடையே தற்பொழுது பெரும் குழப்பம் நிலவிவருகிறது.
இது குறித்து கருத்த தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ந வேதநாயகன் அவர்கள், பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படலாம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும், பட்டம் பெற்ற வருடத்தின் அடிப்படையில் பட்டதாரிகளின் விபரங்களை அரசாங்கம் தம்மிடம் கோரியிருந்ததாகவும், இதன்படி 2012, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் பட்டம்பெற்ற 3004 பட்டதாரிகளின் விபரங்களை அரசாங்கத்திடம் தாம் அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி பட்டம்பெற்ற ஆண்டுகள் அடிப்படையில், இந்த நியமனங்கள் வழங்கப்படலாம் என்றும் நியமனம் தொடர்பான மேலதிக விபரங்கள் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.